Thursday, June 10, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 09.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், தேவை- கர்தினால் பெர்த்தோனே

ஜூன்09,2010 புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், இந்தக் கடினமான காலத்தில் திருச்சபைக்கும் மனித சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறார்கள் என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இப்புதனன்று கூறினார்.
ஓர் அருட்பணியாளர் கடவுளின் மனிதர், கிறிஸ்துவின் சாயலாக இருப்பவர் என்று சொல்வது அவர் செபிக்கும் போதும் திருவருட்சதானங்களை நிறைவேற்றும் போதும் மட்டும் அல்ல, அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே, கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ளவேளை, இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அருட்பணியாளர்கள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு இருக்கும் அன்பையும் அக்கறையையும் எடுத்துச் சொன்னார்.
ஓர் அருட்பணியாளர், அன்பாக, இரக்கமாக சிலுவையில் அறையப்பட்ட அன்பாக இருக்கும் கடவுளின் சாயல் என்றும் அவர் உரைததார்.
இந்த நிகழ்வானது இன்றைய அருட்பணியாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால், இது ஒருமையில் இல்லாமல் பன்மையில் இருப்பது, அருட்பணியாளர்களின் வாழ்வு பலவகைப்பட்டதை இது குறித்து நிற்கிறது என்று விளக்கினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக இப்புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் “மனமாற்றமும் மறைப்பணியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஜெர்மனியின் Cologne கர்தினால் Joachim Meisner சிந்தனைகளை வழங்கினார். இந்த நிகழ்வு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் கூடியிருந்தவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனமும் திருப்பலியும் நடைபெற்றன.
இவ்வியாழனன்று புனித மேரி மேஜர் பசிலிக்காவில் “சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் மாலை குருக்கள் அனைவரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையைச் சந்திப்பர். திருநற்கருணை ஆராதனையுபம் ஆசீரும் இடம் பெறும்.
இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனத் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்

ஜூன்09,2010 ஸ்லோவேனியாவில் இறை சாட்சியாக உயிர் துறந்த 19 வயது இளைஞன், இத்தாலியின் 18 வயது பெண் உட்பட ஒன்பது பேர் வரும் மாதங்களில் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று திருப்பீடம் அறிவித்தது.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்த ஒப்புதலுடன் வெளியான இந்தச் செய்தியில், நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளராகப் பணி புரிந்த ஸ்பெயினைச் சார்ந்த Manuel Lazano Garrido இச்சனிக் கிழமையன்று ஸ்பெயினில் Linares நகரிலும், அதற்கடுத்த நாள் ஞாயிறன்று ஸ்லோவேனிய இளைஞன் Lojze Grozde, Celje நகரிலும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்.
Lebanon நாட்டைச் சேர்ந்த Stephen Nehme, ஸ்பெயின் நாட்டினர்களான கப்பூச்சின் சபை சகோதரர் Leopoldo Sanchez Marquez de Alpandeire, திருச்சிலுவை சகோதரிகள் சபையின் Maria de la Immaculada Conepcion, இத்தாலியர்களான Chiara Badano என்ற இளம்பெண், அமல மரி பணியாளர்களின் சபையைத் தோற்றுவித்த Anna Maria Adorni, ரோமேனியாவின் ஆயரும் மறை சாட்சியுமான Szilard Bogdanffy, மரியாவின் தூய இதய சகோதரிகள் சபையை நிறுவிய பிரேசில் நாட்டு Maria Barbara, ஆகியவர்கள் முத்திபேறு பெற்றவர்களாக வரும் மாதங்களில் உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தில் பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Silvano Tomasi

ஜூன்09,2010 மரபணுக்களை மாற்றி நுண்ணுயிரை உருவாக்க வழங்கப்படும் உரிமை நன்னெறி பிரச்சனைகளை உருவாக்குவதுடன், இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்படவில்லை எனில், ஏழை நாடுகள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
இச்செவ்வாயன்று ஜெனீவாவில் உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுச் சொத்துரிமை குழுவில் (TRIPS) பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
நுண்ணுயிர்கள் குறித்து வழங்கப்படும் இந்த உரிமை நன்னெறிக்கு முரணாகச் செல்வதுடன், வளர்ந்து வரும் பல ஏழை நாடுகளின் முன்னேற்றத்தையும் அதிகம் பாதிக்கும் என்று கூறிய பேராயர் Tomasi, உயிர்கள் குறித்த வளங்களில் தனியாருக்கு ஏக உரிமைகள் அளிப்பதால், அடிப்படை உணவு, மருந்துகள் போன்ற தேவைகளில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தினார்.
தனியாருக்கு வழங்கப்படும் இந்த உரிமைகள், உணவு குறித்த பாதுகாப்புக்குப் பெரிதும் ஆபத்தானது என்றும் உலகம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து மக்களின், அதிலும் சிறப்பாக நலிந்த மக்கள், ஏழைகள் இவர்களின் நன்மைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் Silvano Tomasi கூறினார்.


நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வத்திக்கான் உயர் அதிகாரி ஐ.நா.வை வலியுறுத்தல்

மே09,2010 அத்தியாவசிய மருந்துகள் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு உறுதி வழங்கி, நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 14வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் உலகின் நலவாழ்வுத்துறையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.
தலத்திருச்சபைகளும் துறவு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டத்தை மதித்து நலவாழ்வுத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர், கத்தோலிக்கத் திருச்சபை, 5,378 மருத்துவமனைகள், 18,088 மருந்தகங்கள், 521 தொழுநோயாளர் மையங்கள், 15,448 முதியோர், மாற்றுத்திறனுடையோர் இல்லங்கள் உட்பட பல நலவாழ்வு மையங்களை நடத்தி வருகின்றது என்றார்.
வளரும் நாடுகளில் 50 விழுக்காட்டினர் ஏழ்மையினால் ஏற்படும் நோய்களால் துன்புறுகின்றனர், இது வளர்ந்த நாடுகளைவிட சுமார் பத்து மடங்கு அதிகம் என்றும் சுகாதாரத்திற்குப் பணம் செலவிடவேண்டியிருபப்தால் ஆண்டுதோறும் 10 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் வளரும் நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 50 முதல் 90 விழுக்காடுவரை நோயாளிகளே செலவழிக்க வேண்டியிருக்கின்றது, சுமார் 200 கோடிப்பேர் அத்தியாவசிய மருந்துகளின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.

போபால் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை ஒத்துழைக்கும் - மத்திய பிரதேசத் தலத் திருச்சபை

ஜூன்09,2010 போபால் நச்சு வாயு விபத்து சம்பந்தமான வழக்கில் போபால் நீதிமன்றம் இத்திங்களன்று அளித்துள்ள தீர்ப்பு, நீதியை அவமதிக்கும் ஒரு குற்றம், எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று மத்திய பிரதேசத் தலத் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தில், எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று கூறிய போபால் நீதி மன்றம், அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கியிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வளவு தாமதமாகவும், இவ்வளவு குறைந்த அளவு தண்டனையோடும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வகைத் தீர்ப்புகளால் மக்கள் வெறுப்படைந்து, பணத்திற்காக குற்றங்கள் புரிபவர்களின் துணையை நாடி, நீதியைத் தேடிக் கொள்ளும் அபாயங்கள் உள்ளன என்று ஜபல்பூர் ஆயர் Gerald Almeida கூறினார்.
இந்த விபத்தின் முக்கிய பொறுப்பாளரான Union Carbide நிறுவனத்தின் தலைவர் Warren Anderson எவ்வகையிலும் தண்டிக்கப்படாமல், அமெரிக்காவில் வாழ்ந்து வருவது இந்திய அரசையும், நீதித் துறையையும் கேலிக்குரியதாய் ஆக்கியுள்ளதென மத்திய பிரதேசத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Anand Muttungal கூறினார்.
நீதிக்குப் புறம்பான இத்தகைய தீர்ப்புகளால் இந்தியர்கள் அனைவரும் அவமானப் படுகிறோம் என்று அனைத்திந்தியத் துறவியர் அவையின் செயலர் அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.

விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடை - மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera

ஜூன்09,2010 மனிதர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடையென்றும், வாழ்வின் பல மதிப்பீடுகளைப் பின் பற்ற இவை அதிகம் உதவும் என்றும் மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
இவ்வெள்ளியன்று தென் ஆப்ரிக்காவில் துவங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்குச் செல்லும் மெக்சிகோ நாட்டு கால் பந்தாட்ட வீரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல் விசுவாச வாழ்வில் கிறிஸ்துவர்களும் ஆர்வமாய் பங்கேற்க வேண்டுமென கூறிய புனித பவுலின் சொற்களை நினைவு படுத்திய கர்தினால் Carrera, தியாகங்கள் இன்றி எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படுவது கடினம் என்று கூறினார்.
இந்த உலகின் பரிசுகள், புகழ் எல்லாம் மறையக் கூடியவை ஆனால், மாறாமல், மறையாமல் இருக்கும் நிறைவாழ்வை நாடுவதே நம் கடமை என்பதையும் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera எடுத்துரைத்தார்.

சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்

ஜூன்09,2010 தங்கள் சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எகிப்திலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள எகிப்து நாட்டில் கடந்த வாரம் அங்குள்ள நீதி மன்றம் ஒன்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த இருவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கியதை அடுத்து, அங்குள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான Shenouda மற்றும் அச்சபையின் 90 அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவி வரும் இக்காலத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை தன் கொள்கைகளை ஆதரித்து, நீதி மன்றத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மதிப்பது தங்கள் கடமை என்றாலும், விவிலியம் கூறும் சட்டங்களே காப்டிக் சபையின் அடிப்படையாகும் என்று தலைவரான Shenouda கூறினார்.
எகிப்தில் வாழும் 7 கோடியே 80 லட்சம் மக்களில் 10 விழுக்காடு கிறிஸ்துவர்கள். அந்தக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.



வத்திக்கான் வானொலி – செய்திகள் 00.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்பெயின் பிரதமரைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை

ஜூன்10,2010 ஸ்பெயின் பிரதமர் José Luis Rodríguez Zapateroஐ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் நூலக அறையில் சுமார் முப்பது நிமிடங்கள் திருத்தந்தையுடன் தனியாகப் பேசிய பிரதமர் Zapatero, ஸ்பெயினின் வெளியுறவுத்துறை அமைச்சர் Miguel Ángel Moratinos உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழுவைத் திருத்தந்தையிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஸ்பெயின் பிரதமர் Zapatero.
உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, அதன் அறநெறிக் கூறுகள், மத்திய அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளின் நிலைமைகள், இன்னும், ஸ்பெயினில் கொண்டுவரப்பட்டுள்ள சமய சுதந்திரம் குறித்த புதிய சட்டம், கல்வியின் முக்கியத்துவம், மனித வாழ்வின் புனிதம் போன்றவை பற்றிய திருச்சபையின் எண்ணங்கள் இச்சந்திப்புக்களின் போது கலந்து பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், CERN என்ற அணு ஆய்வுக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் இயக்குனர் Rolf-Dieter Heuer, நாடுகளுடனான உறவுகளின் பிரதிநிதி Walter Friedemann Eder ஆகியோரையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை.


அருட்பணியாளர்கள் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மறையுரையாற்றினார்

ஜூன்10,2010 ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வில் செபம் இன்றியமையாத உயிர்மூச்சாக இருக்கின்றது, அது குருத்துவ வாழ்வுக்கு இன்னும் சிறப்பான விதத்தில் அத்தியாவசியத் தேவையாக அமைந்துள்ளது என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இடம் பெற்றுவரும் வேளை, இவ்வியாழன் காலை புனித பவுல் பசிலிக்காவில் திருப்பிலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
“சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இத்தலைப்பை மையமாக வைத்துப் பேசிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே, எருசலேம் மாடியறையின் ஆன்மீக அனுபவம் பற்றி விளக்கினார்.
ஆண்டவரின் சகோதரர்கள் என்பது, அவரது வாழ்வைப் பகிர்வதாகும், ஒவ்வொரு நாளும் அவரோடு சேர்ந்து திருஅப்பத்தைப் பிட்டு வாழ்வதாகும் என்றும் உரைத்த கர்தினால், தாயாய் இருப்பது என்பது உலகில் கிறிஸ்துவைத் தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தச் சர்வதேச ஆண்டின் நிறைவு நாளான இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். அதில் குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனவும் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருத்தந்தை 12ம் பத்திநாதர் அமெரிக்க அரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது

திருத்தந்தை 12ம் பத்திநாதர் அமெரிக்க அரசுத் தலைவர் Franklin Rooseveltக்கு எழுதிய கடிதம் ஒன்று இப்புதனன்று மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
Knights of Columbus உரோமை நகருக்கு வந்து 90 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவர்களது பல்வேறு செயல்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்துள்ள கண்காட்சி ஒன்றை உரோம் நகரின் மேயரும், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயும் இப்புதனன்று திறந்து வைத்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனிக்கு எதிரான கூட்டமைப்பு, உரோமைய நகரத்தை இருமுறை தாக்கியதை அடுத்து, 1943ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 அன்று திருத்தந்தை அமெரிக்க அரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், அப்பாவி மக்களையும் கோவில்களையும், மதத் தொடர்புடைய நிறுவனங்களையும் தாக்குதலுக்கு உட்படுத்தக்கூடாதேன்று கேட்டுக் கொண்டுள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உரோமை நகரில் தாக்குதல்களுக்கு உள்ளான புனித லாரன்ஸ் சதுக்கத்திற்குத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் சென்று, அங்குள்ள மக்களைக் கண்டு ஆறுதல் சொன்னதையும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை கத்தோலிக்கர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து, அவர்களை ஒன்றிணைக்க குஜராத் காவல் துறையினர் அண்மையில் நடத்திய கிரிக்கெட் போட்டியை கத்தோலிக்கர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்து, முஸ்லிம் கலவரங்கள் பலவற்றைக் கண்டுள்ள Vadodara நகரில் இவ்விரு மதத்தினருக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி என்று அகமதாபாத்தில் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனராக உள்ள இயேசு சபை குரு Cedric Prakash கூறினார்.
இந்த போட்டியுடன் காவல் துறையினர் தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டால், இது வெறும் மேல் பூச்சு வேலையாக முடியும் என்றும், மாறாக, இந்த முயற்சியைத் தொடர்ந்து, இந்து, முஸ்லிம் இரு குழுக்களுக்கும் இடையே, இன்னும் பல நிலைகளில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்க்க காவல் துறையும் மற்ற அரசுத் துறைகளும் முயற்சி செய்வதே இந்த முதல் முயற்சியை முழுமைக்குக் கொண்டுவரும் என்றும் குரு Cedric Prakash மேலும் கூறினார்.
2002ம் ஆண்டு நடந்த கலவரங்களின்போது இடிக்கப்பட்ட முஸ்லிம் தர்காக்களை குஜராத் அரசு மீண்டும் கட்டித் தரும் பட்சத்தில், அரசின் இந்த முயற்சி இன்னும் நம்பத் தகுந்ததாக மாறும் என்றார் குரு Cedric Prakash.
கிரிக்கெட் மீது இளையோர் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதால், இந்த கிரிக்கெட் போட்டி இளம் தலைமுறையினரிடையே மதங்களைக் கடந்த நம்பிக்கையை வளர்க்கும் என்று Vadodara மறைமாவட்ட முதன்மை குரு Joel R.Pais கூறினார்.


மங்கோலிய நாட்டின் உட்பகுதியில் இருந்த ஒரே கத்தோலிக்கக் கோவில் இரவோடிரவாக இடித்துத் தரை மட்டம்

மங்கோலிய நாட்டின் உட்பகுதியில் Ordos என்ற நகரில் இருந்த ஒரே கத்தோலிக்கக் கோவில் இத்திங்களன்று இரவோடிரவாக இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.
இத்திங்கள் நடு இரவில் 100 பேர் அளவிலான ஓர் கும்பல் கோவிலை இடிக்க ஆரம்பித்த போது, அந்த சப்தம் கேட்டு அங்கு வந்த அருட்தந்தை Gao En, அவருடன் வந்த பொதுநிலையினரின் தலைவர் Yang Yishi இருவரும் இடித்துக் கொண்டிருந்தவர்களைத் தடுத்த போது, அவர்கள் இருவரும் கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
செவ்வாய் காலையில் திருப்பலிக்கு வந்த விசுவாசிகள் கோவில் இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் என்றும் இடிக்கப்பட்ட இடத்தில் வேறு எந்த கட்டிடமும் எழுப்பப்படாமல் இருக்க, அந்த இடிபாடுகளைச் சுற்றி விசுவாசிகள் முகாம்கள் அமைத்துத் தங்கியுள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
கைது செய்யப்பட்ட குருவும், பொதுநிலையினரின் தலைவரும் ஒரு நாள் சிறைகாவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


பெற்றோர் ஒரு நாளில் 49 நிமிடங்களே குழந்தைகளுடன் தங்கள் நேரத்தைச் செலவு செய்கின்றனர் - இங்கிலாந்தில் வெளியான அறிக்கை

பெற்றோர் ஒரு சராசரி நாளில் 49 நிமிடங்களே குழந்தைகளுடன் தங்கள் நேரத்தைச் செலவு செய்கின்றனர் என்று இங்கிலாந்தில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
கத்தோலிக்க குழந்தைகளின் சங்கம் என்ற அமைப்பு, அண்மையில் 3000 பெற்றோர், 1000 குழந்தைகள் மத்தியில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், பெற்றோர் இப்படி குறைவான நேரம் செலவிட ஒரு முக்கிய காரணம் பணமே என்ற கூடுதல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குத் தரமான கல்வியைத் தருவதற்காக பெற்றோர் அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதென்பது உண்மையென்றாலும், இதனால், பெற்றோரின் அன்பைப் பெறாமல், குழந்தைகள் புறக்கணிக்கப் படுவதும் வருத்தமான ஒர் உண்மை என்று இந்தக் கணிப்பை நடத்திய Dr Rosemary Keenan கூறினார்.
இங்கிலாந்தில் குடும்ப வாரம் கொண்டாடப்படவிருக்கும் இந்தச் சூழலில், வெளி வந்திருக்கும் இந்த கணிப்பின் படி, குழந்தைகளில் 66 விழுக்காட்டினர் தங்கள் பெற்றோர், குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிடவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
1859ம் ஆண்டு Westminster மறைமாவட்டத்தில் நிறுவப்பட்ட கத்தோலிக்கக் குழந்தைகள் சங்கம், மதம், இனம் இவைகளைக் கடந்து, குடும்பங்களுக்கு, சிறப்பாகக் குழந்தைகளுக்கு, கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.


மின் சக்தியை உருவாக்கும் சன்னல்களை வடிவமைத்தவர் மில்லேன்னியத்திற்கான தொழில் நுட்பப் பரிசை வென்றார்

மின் சக்தியை உருவாக்கும் சன்னல்களை வடிவமைத்த பேராசிரியர் Michael Gratzel மில்லேன்னியத்திற்கான தொழில் நுட்பப் பரிசை வென்றிருக்கிறார்.
Finland தொழில்நுட்ப சங்கம் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கும் இந்தப் பரிசு, இப்புதனன்று Helsinkiல் பேராசிரியர் Michael Gratzelக்கு வழங்கப்பட்டது.
தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து தங்களுக்கும் உலகத்திற்கும் தேவையான சக்தியை உருவாக்குவதைப் போல், சூரிய ஒளியைப் பெறும் நமது சன்னல் கண்ணாடிகளும் ஏன் நமக்குத் தேவையான மின்சார சக்தியை உருவாக்கக் கூடாது என்ற கேள்வியே இந்த கண்டுபிடிப்பின் அடிப்படையாக இருந்ததென பேராசிரியர் Gratzel செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விருதுடன் வழங்கப்பட்டுள்ள 48,000,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுத்தொகை இந்த ஆராய்ச்சிக்கே மீண்டும் செலவழிக்கப்படும் என்று பேராசிரியர் Gratzel கூறினார்.
கணணி வலைத்தளம் (Web) என்ற தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த Sir Tim Berner-Lee, சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment